Tuesday, June 9, 2020

நிரப்புதலும் நிரம்புதலும்

இப்பேரண்டத்தின் சகலமும் 
வெற்றிடங்களாலும், 
நிரப்புதல்களாலும்,
நிரம்புதல்களாலுமே
நிலைத்து கிடக்கின்றன.

காற்றை கிழித்து 
பறக்கும் ஓர் பறவையின் 
ஒவ்வொரு சிறகு விரிப்பிலும் 
சில வெற்றிடங்களும்
சில நிரம்புதல்களும் 
நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. 

உதிர்ந்த முதிர்ந்த 
இலையின் கிளையினை 
துளிர்கள் நிரப்ப 
துடித்து கொண்டிருக்கின்றன .

நேற்று புயல் சாய்த்துபோட்ட 
ஓர் மரத்தின் வெற்றிடம் 
மனிதர்களால் இன்று 
ஆக்கிரமிக்க பட்டுவிட்டன.

காலியாக்கப்பட்ட 
ஓர் கூண்டில் மறுபடியும்
பறவைகள் திணற திணற 
திணிக்கப்பட்டுவிட்டன. 

பிரியமின்றி பிரியப்பட்ட 
ஓர் காதலனின் (அ) காதலியின் 
கலங்கிய இதயத்தை 
இன்னொருவனாலோ (அ) இன்னொருத்தியாலோ 
பூர்த்தி செய்ய முடியும் 
என்ற நம்பிக்கையில்
பல திருமணங்கள் 
நிகழ்ந்து கொண்டேவிருக்கின்றன.

எல்லோரது வீட்டிலும் 
வெற்றிடமாக்கப்பட்ட 
இறந்தவரின் இடத்தை,
ஓர் குழந்தை -இன்னும் 
நிரப்பிகொண்டேதான் இருக்கிறது.

இந்த வெற்றிட கரைகள் 
என்றும்  மறையாதவை, 
ஆனாலும் இவை 
எவராலோ, 
எதுவாலோ, 
பூசி மொழுகப் படுகின்றன. 

இப்படியாக 
ஏதோவொரு விதத்தில் 
ஏதோவொரு நிலையில் 
நம்முடைய நிரம்புதல்களிலும் 
இன்னொருவரின் அல்லது 
இன்னொன்றின்  நிரப்புதல்களிலுமே
இப்பேரண்டத்தின் சகலமும் 
நிலைத்திருக்கின்றன.

  நேரம்:6.31pm(09.06.2020)
   #நா. ஹரிஹரன்#






5 comments:

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்