Monday, September 9, 2019

நம்பிக்கையை திருடாதே ....!

வாழ்விற்கும் எனக்கும்
திருமணமாகி 20வருடங்கள்
தீர்ந்து போயின.

தித்திக்கும் இன்பம் சிலநேரம்,
தீயாக துன்பம் சிலநேரம்,
இவையே வாழ்வென்றானபின்
தீராத என் ஆசைகளை
தீட்டுவது என் நேரம்.

கனக்கும் என் நெஞ்சுடரில்
கலக்குமந்த கவிதைகளை
கச்சிதமாய் நான் பிரிக்க
பக்குவம் இல்லை யெனக்கு.!

பருவம் செய்யும் வம்புதனில்
உருவம் ஒன்று இல்லை யெனினும்
கர்வம் கொள்ளும் கண்மனிகள்
புருவம் தூக்கும் பூரிப்பு.

நான்தான் யென்ற எண்ணம்
இதுவரை இல்லையெனக்கு!...
வீண்தான் எண்ணிப் பார்க்கையில்
இதுவரை வாழ்ந்த வாழ்வெனக்கு ..!

காசாக நானிருந்தும் -இன்று
 செல்லாக் காசாய்.?
விரலாய் நானிருந்தும் -இன்று
ஆறாம் விரலாய்.?

தேவையற்று கிடக்கும் யான்
ஒருமுறையேனும் தேடப்படுவேனோ..?
பாதையற்று திரியுமெனக்கு
ஒற்றையடிப் பாதையேனும் கிட்டுமோ..?

என் எண்ணக் கிறுக்கல்கள்
கவிதைகள் ஆகுகையில்.
என் எழுச்சி கிறுக்கல்கள்
ஏளனமாய் போய்விடுமோ..?
என் ஏக்கக் கிறுக்கல்கள்
கனவுகள் ஆகுகையில்
என் வாழ்க்கை கிறுக்கல்கள்
கானலாய் கருகிடுமோ.?

வீழ்ந்தாலும் மீள்வேன் -உயிர்
தோய்ந்தாலும் நகர்வேன் .
காய்ந்தாலும் காய்ப்பேன் -அந்த
கவிச்சுவை கனிகளை.!

என் தூக்க கனவை அழிக்க
கண்ணே காத்திராதே.?
என் ஏக்கக் கனவை அழிக்க
காலமே கத்தி கொனராதே..?
என் வாழ்க்கை கடைதனில்
காலமே நம்பிக்கையை திருடாதே..?

கவிதையூற்றில் வளர்கின்ற மரம்யான்
காலமே...,
என் ஆணிவேரை யல்ல
எம் சல்லிவேரைக் கூட
உன்னால் கிள்ளிவிட முடியாது.. !!

   #நா. ஹரிஹரன்#

2 comments:

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்