Saturday, June 6, 2020

புரியாத உணர்வுகள்



உனக்கு என்காதல்
புரியவேண்டுமென
எவ்வித அவசியமும் இல்லை
காதல் புரிதலில் இல்லை
நிச்சயமாக இல்லை.

நம் செய்கை அனைத்தையும்
காதலென்ற மாயபிம்பங்களால்
நீ கட்டமைத்துள்ளாய்.
காதலென்பது புரிதலில் இல்லை
நிச்சயமாக இல்லை.
அவை புரியாத உணர்வுகளின் தொகுப்புகள்.

ஓர் குழந்தை எந்தவித
பலனையும் பாராமல்
நமக்கு தருமந்த
ஒற்றைச் சிரிப்பில்,

நாய்க்குட்டி தன் நாக்கு
எச்சிலால் நம் கன்னத்தை
பசைதடவும் அந்த
சிறுபொழுது சிலிர்ப்பில்,

நம்மை கண்டதும்
கீச்சரிக்கும் ஓர் சிட்டுக்குருவியின்
இன்ப இம்சையில்

புரியாத சில உணர்வுகளை
உதிர்க்க முடியாமல்
திணரும் நம் இதயங்களில்

வலிகளை மொழிபெயர்க்க
தெரியாமல் நம் கண்கள்
கண்ணீரை சிந்தவிடும்
அந்த நொடிகளில்,

உணவருந்த முடியாமல்
மனம் கனத்துப்போன
முப்பொழுதுகளில்,

புரிதல் இல்லாமல் இருந்து
புரிதல் வருகையில் பிரிதல் வரும்
அந்த சூன்ய பொழுதுகளில்,
உண்டாகும் புரியாத சில
உணர்ச்சிகளில்,

வார்த்தைகளற்று,
மொழிகளற்று,
உள்ளத்தில் எழுந்த
உணர்வுகளை
கதைக்க முடியாமல்,

இன்னும்  இன்னும் இன்னும்
நிரப்பப்படாமலே கிடக்கும்
பல்வேறு உணர்வுகளில்
நிரம்பிகிடக்கிறது
நமக்கு புரியாத காதல்

     *#நா. ஹரிஹரன்#*

                               நேரம்:8.35 am(07.06.2020)

9 comments:

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்